கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள திரையரங்கு குடியிருப்பு பகுதியில் சுவரேறி குதித்ததில் ஏற்பட்ட வாய்த்தகராறில் குடியிருப்பு உரிமையாளரை சரமாரி தாக்கிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கணபதி திரையங்கம் உள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பில் ரங்கசாமி (62) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இத்திரையரங்கில் இரவு படம் பார்க்கும் சிலர் சுற்றி வருவதற்கு சோம்பல்பட்டு, இக்குடியிருப்பின் மதில் சுவரில் ஏறிக் குதித்து செல்கின்றனர். இதனால் அங்கு இது பொது வழியல்ல என எச்சரிக்கை பலகை வைத்தும் இத்தகைய அடாவடி செயல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு கும்மிடிப்பூண்டி, ஸ்ரீவாரி சாய்பாபா நகரை சேர்ந்த பாக்யராஜ் (26), அருண் (27) ஆகிய இருவரும் கணபதி திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். பின்னர் இருவரும் திரையரங்கின் அருகிலுள்ள குடியிருப்பின் மதில்சுவர் ஏறி குதித்துள்ளனர். இதை ரங்கசாமி கண்டித்து, இது பொது வழியல்ல என கூறியுள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. இதில் ரங்கசாமியை இருவரும் சரமாரி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசில் ரங்கசாமி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாக்யராஜ், அருண் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கும்மிடிப்பூண்டி பஜார் வந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.