சீர்காழி: சீர்காழியில் மயான கொட்டகையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக 16ம் தேதி முதல் செயல்படாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு மாற்றாக அதேபகுதியில் பழைய திறந்த வெளி மயான கொட்டகையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக பழைய மயான கொட்டகையை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பழுதடைந்த மயான கொட்டகையை சீரமைக்காததால் இறந்தவரின் உடல்கள் எரிக்கும் போது, மயான கொட்டகையின் சிதலமடைந்த மேற்கூரை வழியாக புகை வெளியேறுவதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஒரேநாளில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் இறந்த உடல்கள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த திறந்தவெளி மயான கொட்டகையின் மேற்கூரையை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மேலும் நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணியை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.