×

2 மாதத்தில் 72 குற்றவாளிகளுக்கு பிணையில் வரமுடியாத சிறை: சென்னை காவல்துறை நடவடிக்கை

சென்னை: கடந்த 2 மாதத்தில் 72 குற்றவாளிகளுக்கு பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து சென்னை காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 1.1.2023 முதல் 24.2.2023 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 25 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 17 குற்றவாளிகள்,  சைபர் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி,  கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள் என மொத்தம் 52 குற்றவாளிகள் சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18.2.2023 முதல் 24.2.2023 வரையிலான ஒரு வாரத்தில் 6 சட்டம் -ஒழுங்கு குற்றவாளிகள் மற்றும் ஒரு திருட்டு குற்றவாளி என மொத்தம் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி ஒரு வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய காவல் மாவட்டங்களில் தலா 2 குற்றவாளிகள் மற்றும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் ஒரு குற்றவாளி  என மொத்தம் 11 குற்றவாளிகள்  கடந்த 18.2.2023 முதல் 24.2.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த ஒரு வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த வகையில், நடப்பாண்டில் இதுவரை (1.1.2023 முதல் 24.2.2023) வரை சென்னையில் 72 குற்றவாளிகள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai , 72 convicts, non-bailable jail, Chennai police action
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...