சென்னை: உயர் கல்வி வாய்ப்புகளை அறிய, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்கின்றனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வரவுள்ள நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், பள்ளி அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் ஆலோசித்து ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 3,123 மேல்நிலை பள்ளிகளில் இருந்து மாணவர்கள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவற்றின் முதல் பகுதியாக பிப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 8 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் ஒன்றிய கல்லூரிகளுக்கு சென்று உயர் கல்விக்கான வாய்ப்புகளை அறிந்துள்ளனர். இந்த மாணவர்களை கல்லூரி மாணவர்களும் அன்புடன் வரவேற்று தங்கள் கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள், வகுப்பறைகள், நூலகம் என அனைத்தையும் பார்வையிட செய்தனர்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முதன்முறையாக இது போன்ற ஒரு முயற்சி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி படிப்பு முடிந்த பிறகு கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்களுக்கான துறையை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்களை சந்திக்கின்றனர். ஆனால் இதுபோன்ற ஒரு அனுபவத்தினால் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மாணவர்கள் சரியாக தேர்ந்தெடுப்பார்கள். உயர்க்கல்வி குறித்து அவர்களுக்கு இருக்கும் குழப்பம் விலகி சரியான பாதையை தேர்ந்தெடுக்க இது உதவும் என்று தெரிவித்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இது போன்ற ஒரு முயற்சி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.