×

ஓபிஎஸ் தாயார் உடல் தகனம்

பெரியகுளம்: உடல்நலமின்றி இறந்த ஓபிஎஸ் தாயாரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95), உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் இறந்தார். நேற்று காலை முதல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. சிவ பக்தர்கள் திருமறை மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்ய, ஓபிஎஸ் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். திமுக சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர்,  உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோரும், பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தாயாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இரவு 7 மணியளவில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : OPS , OPS mother's cremation
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...