×

குமரி நிர்மலன் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.1.76 கோடி சொத்துக்கள் மதுரை நீதிமன்றத்தில் ஏலம்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலை என்ற இடத்தில் நிர்மலன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த அந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் கேரள மக்களும் ஏராளமானோர் பணம் செலுத்தி வந்தார்கள். பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில் திரட்டப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்களிடமிருந்து அந்த நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட மக்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். கேரளாவிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், நிதி நிறுவனத்தின் அதிபரான நிர்மலன், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த மோசடி தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நிர்மலன் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 13,673 முதலீட்டாளர்களுக்கு 510 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொருளாதாரக் குற்றப் பிரிவினர், நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு, ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரம் சப்-கோர்ட் நியமித்த அதிகாரிகள் ரூ. 179 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தார்கள். இது தொடர்பான வழக்கு விசாரணை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழான சிறப்பு நீதிமன்றத்தில் (மதுரை) நடந்து வருகிறது. இந்த நிலையில் நிர்மலனுக்கு சொந்தமான சொத்துக்கள் 24.3.2023 மதியம் 11 மணிக்கு , மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. சொத்துக்கள் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பகிரங்க ஏலம் விடப்பட உள்ள சொத்துக்களின் மதிப்பு (கோர்ட் நிர்ணயத்தின் படி) ரூ.1 கோடியே 76 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும்.

Tags : Kumari Nirmalan Nithi Corporation ,Madurai , 1.76 crore property owned by Kumari Nirmalan Nithi Corporation auctioned in Madurai court
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...