×

ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் மறைந்த செய்தியறிந்து வேதனை... டிடிவி தினகரன், சசிகலா, ராமதாஸ், சீமான் இரங்கல்!!

பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு  பாமக நிறுவனர்  ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் :  “முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர்  உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமானதையறிந்து வேதனையடைந்தேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்,என்றார்.

ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்புத்தாயார் அம்மா பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம்  குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அம்மையார் பழனியம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.   


Tags : O PANNIER ,DTV ,Dinakaran ,Sasigala ,Ramadas ,Seeman , Oh Panneer Selvam, Angam, TTV Dhinakaran, Sasikala, Ramadoss, Seeman
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி