சென்னை,பிப்.25: கடந்த மாதம் ஜனவரி 4ம் தேதி ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் எண்(22671/22672), தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தமிழக மக்களிடமிருந்து பல மனுக்கள் வந்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘பிப்.26 ம் தேதி( நாளை) முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நிற்கும் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து சென்னை வரும் போதும் தாம்பரத்தில் நிற்கும். நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.