காஞ்சிபுரம்: இளையனார்வேலூர் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி மாத லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பெற்ற இளையனார்வேலூர் முருகன் கோயிலில் ஆடி மற்றும் தை கிருத்திகை நாட்களில் நடைபெறும் விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோன்று, பங்குனி மாத பிரம்மோற்சவம் மற்றும் மாசி மாத லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெறும்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான லட்சார்ச்சனை விழா மாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, கடந்த 20ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் இன்று பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, லட்சம் வேதமந்திரம் சிவாச்சாரியார்களால் சொல்லப்பட்டு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைசி தினத்தன்று நண்பகல் 2 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த லட்சார்ச்சனை விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் பெயரை 100 ரூபாய் செலுத்தி பதிவு செய்து சங்கல்பம், அர்ச்னை செய்து கொள்வது வழக்கம்.
அவ்வகையில், லட்சார்ச்சனை விழாவிற்காக ஏராளாமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து, தங்கள் பெயரில் அர்ச்னை செய்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தபாரதி வழிகாட்டுதல்படி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ், ரவி குருக்கள், மேலாளர் செங்குட்டுவன், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.