சென்னை: சென்னை கோயம்பேட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடலை மர்ம கும்பல் எரித்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் பிரபல ஓட்டல் அருகே நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே காரில் வந்த ஒரு மர்ம கும்பல் அந்த நபரை சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றது. பின்னர், சென்னை நொளம்பூர் எஸ்.எஸ்.வி கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து கை கால்களை கட்டி சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த அந்த நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, பயந்து போன அந்த கும்பல் பலியானவரை குன்றத்தூர் பகுதிக்கு காரில் எடுத்து சென்று, உடலை எரித்து அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றது. இதுகுறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொலை நடந்த சம்பவம் நொளம்பூர் பகுதி என்பதால், இவ்வழக்கை நொளம்பூர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் இறந்துபோனவர் பாபு (47) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக, இவரை கடத்தி சென்று கொலை செய்து இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவதா அல்லது நொளம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவதா என்பது குறித்து போலீசார் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.