நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ அறுவடை பணி நடந்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் முதலில் தேரூர், பறக்கை பகுதியில் அறுவடை தொடங்கி மற்ற பகுதிகளில் நடக்கும். பறக்கை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. கடந்த 7ம் தேதி அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 9 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மோட்டா ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2115க்கும், சன்னரகம் ரூ.2165க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களும் வயல்பகுதிகளுக்கு வந்து நெல்களை கொள்முதல் செய்து வருகின்றனர். பறக்கையில் அறுவடை தொடங்கியபோது 3 அறுவை இயந்திரங்கள் உதவியுடன் நெல் அறுவடை நடந்தது. இதனால் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அதிக அறுவடை இயந்திரங்களை வரவைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் 5 தனியார் அறுவை இயந்திரங்கள் கொண்டு அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும் பறக்கையில் திறக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அதிக அளவு நெல்களை கொடுத்து வருகின்றனர்.
நெல்கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை கொள்முதல் செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நெல்கொள்முதல் நிலையத்திற்கு அதிக அளவு நெல் மூட்டைகள் வந்துக்கொண்டு இருக்கிறது. பின்னர் நெல்கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூடைகளை லாரிகள் மூலம் தனியார் அறவை மில்லுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அரசு ஒப்பந்தத்தின் படி அந்த மில்லில் அறவை செய்து அரசுக்கு அரிசி வழங்கப்படும். இது குறித்து முன்னோடி விவசாயி பெரியநாடார் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்களை, நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்து வருகிறது.
பறக்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை பறக்கை நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுகிறது. புதிதாக திறக்கப்பட்ட பறக்கை நெல்கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் பாதை சரியாக இல்லை. இதனால் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் மண்ணில் புதையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் பாதையை உறுதியாக செய்துகொடுக்க வேண்டும். என்றார்.