கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட தெற்கு கிராம பகுதியில் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் வெங்கடேசனுக்கு புகார் வந்தது. அதன்பேரில் கெங்கவல்லி தாலுகா சர்வேயர் மூலம் அப்பகுதியில் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் லோகாம்பாள், வருவாய் அலுவலர் முனிராஜ், கிராம நிர்வாக அலுவலர் இளவரசு மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் இளமான், மகிமை நாதன், இன்னாசி, புஷ்பநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றி மீட்கப்பட்டது. இதேபோல் அரசு நிலங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி கெங்கவல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.