பொன்னை: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்றுகாலை கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த மாதம் 26ம்தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. இன்றுகாலை பிரம்மோற்சவ கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொடிகம்பம் அருகே அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தார். முன்னதாக கொடியேற்றத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை சிம்ம வாகனத்திலும், நாளை மறுதினம் தங்க மயில் வாகனத்திலும் சுப்பிரமணியர் வீதிவலம் வருகிறார். பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 2ம்தேதி முதல் 5ம்தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். 6ம்தேதி முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். முன்னதாக பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் உற்சவம் நடந்தது.