சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாகு, ரூ.51.31 லட்சம் ரொக்கமும், ரூ.11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மற்ற பொருட்களின் மதிப்பு ரூ.1.33 லட்சம் என தகவல் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்தார்.
1430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தலாம்:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடியில் மட்டும் 1,206 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.