விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆர்.சி.மேலக்கொந்தை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த மக்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கல்லறையில் வைக்கப்பட்டுள்ள சிலுவைகளை மர்ம ஆசாமிகள் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு கல்லறையில் உள்ள சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மீண்டும் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி ஆய்வாளர் பிரகாஷ் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் இது தொடர்பாக ஆர்.சி மேலக்கொந்தை கிராம மக்கள் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் மற்றும் ஆலய வளாகம் ஒரே இடத்தில் உள்ளது. இந்த வளாகத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் இடங்களில் இரவில் சமூக விரோதிகள் மது அருந்துவதும், கஞ்சாவை புகைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமின்றி பள்ளிக்கூடம் ஆலயத்தின் அருகே மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.