சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்தது. அதேபோல, மேலும் பல்வேறு கட்சிகளும் புகார் அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது பணநாயகமே ஜனநாயகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.