×

மாதவரம் துணிக்கடையில் ரூ.24 லட்சம் திருடிய 2 ஊழியர்கள் சிக்கினர்: 3 பேருக்கு வலைவீச்சு

திருவொற்றியூர்: மாதவரம் துணிக்கடையில் ரூ.24 லட்சம் நூதன முறையில் திருடிய கடை ஊழியர்கள் இரண்டு பேரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் தபால் பெட்டி ஆர்.சி. குயின்ஸ்பார்க் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விமல் குமார் (30). இவர், தனது நண்பர் பிரவீன்குமார் என்பருடன் இணைந்து மாதவரம் நெடுஞ்சாலை கே.கே.ஆர்.நகர் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த துணிக்கடையில் பெரம்பூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த விவேகானந்தன் மகன் அருண்குமார் (28), மாத்தூர், சின்னசாமி தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் மகன் பரத் (25), மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 126வது தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு மகன் ரித்தின்பாபு (25) ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கடையில் விற்பனையின் பண வரவு குறைந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் விமல்குமார் கடந்த 16ம் தேதி கடையில் விற்பனை, துணிகளின் இருப்பு விவரங்கள் குறித்து சோதனையிட்ட போது, துணி வாங்கியதற்காக வாடிக்கையாளர்கள் தந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்காமல் கடை ஊழியர்களான அருண்குமார், பரத் மற்றும் ரித்தின்பாபு ஆகியோர் நூதன முறையில் திருடியதோடு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகளையும் திருடியது தெரிய வந்தது.

மேலும், இதற்கு முன்பு கடையில் பணியாற்றி வெளியே சென்றுள்ள தாமஸ் (22), புவனேஸ்வர் (22) ஆகிய இருவரும் பணத்தை திருடியதும், இவர்கள் ஐந்து பேரும் ரூ.24 லட்சம் ரொக்கம் மற்றும் துணிகள் ஆகியவற்றை திருடியுள்ளதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமல்குமார், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புழல் சரக காவல் உதவி ஆணையர் ஆதிமூலம் ஆலோசனையின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி, ஜெய்சங்கர், அந்தோணி ஜோசப், தலைமை காவலர் ரோஹித் ஆகியோர் கொண்ட குழுவினர் அருண்குமார், பரத் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, தாங்கள் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து திருட்டு சம்பவத்தில் இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், பரத் ஆகியோரை கைது செய்தனர். பிறகு மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த திருட்டில் தொடர்புடைய ரித்தின் பாபு, தாமஸ், புவனேஸ்வர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். துணிக்கடையில் கடை ஊழியர்கள் 5 பேர் ரூ.24 லட்சம் திருடியது மற்ற வியாபாரிகள், கடை உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madhavaram , 2 employees caught stealing Rs 24 lakh from Madhavaram cloth shop: 3 people caught
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்