குளச்சல்: முருககடவுளின் 2 வது அறுபடை வீடான திருச்செந்தூர் பாலசுப்ரமணியன் திருக்கோயிலில் மாசி பெரும் திரு விழா வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழாவில் பங்கேற்க, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் முருக பக்தர்கள் காவடி கட்டி செல்வது வழக்கம். காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் செல்வது வழக்கம். தற்போது இதற்காக பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
குளச்சல் பகுதியில் புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோயிலில் 49 வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது. இதேபோல் சாம்பசிவபுரம் சிவன், துர்கா தேவி கோயிலில் தூக்க பறக்கும் காவடி, புஷ்ப காவடி, சாஸ்தான்கரை தெற்கு கள்ளியடைப்பு வீரபத்ர காளியம்மன் கோயிலில் புஷ்ப காவடி,6 அடி வேல் காவடி, பறக்கும் காவடி, பாறக்கடை மகாதேவர் கோயிலில் பறக்கும் காவடி, புஷ்ப காவடி, மாதனாவிளை ஸ்ரீமன் பத்மநாப சுவாமி கோயிலில் எண்ணை காவடி, மேலத்தெரு தேசிக விநாயகர் கோயிலில் எண்ணை காவடி, கீழத்தெரு இசக்கியம்மன் கோயிலில் எண்ணை காவடி, வெள்ளங்கட்டி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் எண்ணை காவடி, இரும்பிலி கோயில்விளை அம்மன் கோயிலில் எண்ணை காவடி, சன்னதி தெரு முத்தாரம்மன் கோயிலில் பறக்கும் காவடி, எண்ணை காவடி, பள்ளிவிளாகம் உஜ்ஜையினி மாகாளி கோயிலில் புஷ்ப காவடி ஆகிய காவடிகள் கட்டப்பட்டு திருச்செந்தூர் புறப்பட்டு செல்கிறது.
நாளை இரவு இந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு,சனிக்கிழமை காலை மற்றும் பகல் வேளையில் ஊரில் திரு வீதி உலா செல்கிறது. மாலை அனைத்து காவடிகளும் குளச்சல் ஆலடி அதிசய நாகர் ஆலயம் சந்திப்பு வந்தடைந்து, திங்கள்நகர், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி,முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது.காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோயில்கள் மிகுந்த களைக்கட்டி காணப்படுகிறது.
* விதவிதமான காவடிகள்
திங்கள்சந்தை: இரணியலை பொறுத்தவரையில் மேலத்தெரு, கீழத்தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு, தலக்குளம் புதுவிளை, செட்டியார்மடம், திங்கள்சந்தை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பறக்கும் காவடி, புஷ்பகாவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, தேர் காவடி, அக்னி காவடி போன்ற விதவிதமான காவடிகள் எடுத்து வீதி உலா வந்த பிறகு மாலை ஊர்வலமாக திருச்செந்தூர் முருகன் கோயில் நோக்கி செல்கின்றனர்.
பக்தர்கள் கட்டி செல்லும் காவடிகளை காண திங்கள்நகர் இரணியல் - தோட்டியோடு சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்வார்கள். காவடி திருநாளை முன்னிட்டு திங்கள்நகர் முதல் தோட்டியோடு வரை அன்று மதியம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பணிகளை குளச்சல் போக்குவரத்து, இரணியல் போலீசார் மேற்கொள்வார்கள். காவடி திருவிழா ஏற்பாடுகளை அந்தந்த ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.