நத்தம்: நத்தம் கிளை நூலகத்தை நகர்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி 9வது வார்டு பகுதியில், அய்யாபட்டி செல்லும் சாலையில் நத்தம் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இது காலை 8 மணி முதல் இரவு வரை செயல்பட்டு வருகிறது. நத்தம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும், நத்தம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள 23 கிராம ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சேவை செய்ய இந்த நூலகம் உள்ளது. இந்த நூலகமானது ஊரின் ஒதுக்குப்புறமாகவும், பொது மயானப் பகுதியின் அருகிலும் உள்ளது. இந்த நூலகத்தில் பொதுமக்கள் படிக்கும் வகையில் நாவல்களும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அறிவியல், கணினி, பூகோளம், பொது அறிவு தொடர்பான நூல்களும் நிறைய உள்ளன.
ஆனால் நூலகம் அமைந்திருக்கும் பகுதியானது மாணவ, மாணவிகள், வாசகர்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாமல் உள்ளது. மேலும் அங்கு வாசகர்கள், மாணவர்கள் புத்தகங்களை எடுத்து பயிலும் வகையில் வசதியில்லாமல் உள்ளது. இதனால் இந்த நூலகம் புத்தகங்களின் குடோனாக உள்ளது. ஆனால் பயன்பாட்டுக்கு உரிய வகையில் நூலகத்திற்கான வசதியும், தன்மையும் பெற்றிருக்கவில்லை. இன்று பள்ளி, தொழில்நுட்பம், கலை போன்ற பல்வேறு படிப்புகளை படித்தாலும், தகுதி, நுழைவு, டி.என்.பி.எஸ். சி, எஸ்எஸ்சி, போன்ற பல் தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இந்த நூலகங்கள் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் இந்த நூலகத்தை தேடிப் பிடித்து படிப்பதற்கு வந்தால் முறையாக திறக்கப்படாமல் மூடிக்கிடக்கும் அவலமும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நூலகத்திற்கான வசதிகளை ஏற்படுத்தி நூலகர்களையும், உதவியாளர்களையும் நியமித்து வாசகர்கள் நலன் காக்க வேண்டும். மேலும் இப்பகுதி மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு தயாராகும் வகையில் நூல்களை பயிலுவதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நூலகத்தை நத்தம் நகர்ப் பகுதியில் காந்திஜி பூங்கா பகுதிக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றினால் வாசகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்கின்றனர்.