தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாதா கோட்டை புறவழிச்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொண்டு வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோர், மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த புகையால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
குப்பை கொட்டுவதன் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் இதே செயலை சிலர் செய்து வருகிறார்கள். இங்கு கொட்டப்படும் குப்பைகளில் அதிகமானது மருத்துவ கழிவு மற்றும் கோழி கழிவாகும். இவர்களுக்கு அபராதம் விதித்தாலும் மீண்டும், மீண்டும் இதே செயலை செய்து வருகிறார்கள். இரவு நேரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் யார் என்பது தெரியாமல் போகிறது.
எனவே இந்த பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தி குப்பை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.