ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கோவையைச் சேர்ந்த கணேஷ் பாபு மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த விஜய் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மாலை ஈரோடு சீமான் பிரசாரம் செய்து வந்தார். 16ம் நம்பர் சாலையில் தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வந்தனர்.
சீமான் பிரசார வாகனம் கடந்தவிட்ட நிலையில், பின்னால் வந்த அக்கட்சியினர் திமுகவினர் மீது திடீரென்று கல்வீசி தாக்கி உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். அவர்களையும் நாம் தமிழர் கட்சியினர் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு எஸ்பி சசிமோகன் தலைமையில் டிஎஸ்பி ஆனந்தகுமார் மற்றும் துணை ராணுவ படையினர் விரைந்து சென்று தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திமுக நகர செயலாளர் முகமதுயூனஸ் (49) உட்பட 5 பேரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் உள்பட 5 பேரும் மற்றும் ஆயுதப்படை போலீசார் 3 பேர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர், கோவையைச் சேர்ந்த கணேஷ் பாபு மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.