அம்பத்தூர்: கொரட்டூரில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சைக்கிளில் இரவு ரோந்து சென்றவாறு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கொரட்டூரில் ‘அக்கம்பக்கம் கண்காணிப்பு’ என்னும் புதிய திட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு இந்த திட்டம் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரால் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கொரட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சைக்கிளில் ரோந்து சென்றனர். சாலையில் செல்லும் பொதுமக்கள், முதியோர் மற்றும் இளைஞர்களை சைக்கிளில் சென்றவாறு நேரில் சந்தித்து சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளை குறித்து கேட்டறிந்தனர். கொரட்டூர் ஆவின் சாலை எம்ஜிஆர் மன்றம் முதல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி அவர்களோடு கலந்துரையாடினர்.
பாடி பிரிட்டானியா பகுதியில் உள்ள யூனி 5 என்கிற தனியார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் சுமார் 1 மணி நேரம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர்.