×

வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜில்ராஜ் (44), மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மணலி செல்லும் பேருந்தை (தடம் எண் 44) ஓட்டிச்சென்றார்.

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிமென்ட்ரி சாலை அருகே வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றனர்.
அப்போது விஜில்ராஜ், அவர்களுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். இதில் அந்த கும்பல் ஆத்திரம் அடைந்துள்ளது. பின்னர் அவர்கள் பேருந்தை முந்திச்சென்று வழி மறித்துள்ளனர். அப்போது விஜில்ராஜூடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜில்ராஜை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு முகம், மூக்கு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து விஜில்ராஜ் போலீசில் புகார் அளித்தார். வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜில்ராஜை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் விஜில்ராஜை தாக்கியது, வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்த பரத்குமார் (எ) பரத் (20), டில்லி பாபு (எ) பாபு (21), வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (19), வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்த சந்தோஷ் (எ) சீயான் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கத்தி, ஒரு இரு சக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Vannarappat , 4 persons arrested for assaulting city bus driver in Vannarappat
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...