சென்னை: டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, வருகிற 28ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற படிப்புகளில் சேருவதற்கும் டான்செட் பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து பொது இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை என்று அழைக்கப்படும் ‘சீட்டா’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த 2 தேர்வுகளுக்கும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், அதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேர்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்து உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பித்தவர்களில் எம்.சி.ஏ. படிப்புக்கான டான்செட் தேர்வு மார்ச் 25ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான சீட்டா நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 2022-23ம் கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களும் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையின் போது அதனை சமர்ப்பிக்க வேண்டும்.