ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் கடல் ஆமை, புள்ளிமான் உடல்கள் நேற்று கரை ஒதுங்கின.ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் வடக்கு கடற்கரை பகுதியில் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கடற்கரையில் நேற்று அழுகிய நிலையில் கடல் ஆமை, புள்ளி மான் உடல்கள் கரை ஒதுங்கின.
ராமேஸ்வரம்,தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் புள்ளிமான் உடலும் கரை ஒதுங்கியதால், இதனைக்கண்ட மீனவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இலங்கை அல்லது தமிழ்நாடு கடலோரப் பகுதி காடுகளில் உள்ள மான்கள் ஆறு கடலில் கலக்கும் இடமான முகத்துவாரங்கள்
வழியாக கடலில் இறங்கிவிடும். பின் கடல் நீரோட்டம் மற்றும் அலையின் வேகத்தில் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிருடனோ அல்லது பிணமாகவோ கரை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பல ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் சேரான்கோட்டை, தனுஷ்கோடி கடல் பகுதியில் மான் உயிருடன் கரை ஒதுங்கிய சம்பவம் நடந்துள்ளது. நேற்று கோதண்டராமர் கடற்கரை பகுதியில் ஆமை, மான் உடல்கள் கரை ஒதுங்கியதை அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன்,மீனவர்களிடம் விசாரணை செய்தனர். பின் அவற்றின் உடல்களை அங்கிருந்து அகற்றி வேறு பகுதியில் புதைத்தனர்.