*பொதுமக்களுக்கான பிரிவில் பெண்கள், ஆண்கள் பங்கேற்பு
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பொதுமக்களுக்கான பிரிவில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் போட்டியில் பங்கேற்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவருக்கு நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று பொதுமக்களுக்கான 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பிரிவினருக்கும் இடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டி, ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியானது ஆண், பெண் இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டியில் ஆலங்காயம் அபெக்ஸ் அணியினர் முதலிடத்தையும், நாட்றம்பள்ளி விவிசி அணியினர் இரண்டாம் இடத்தையும் திருப்பத்தூர் அப்னேஷ் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
இதே போன்று பெண்களுக்கும் கைப்பந்து போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த நபர்களை தேர்வு செய்தனர்.
இந்த பொதுப் பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியின் போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன் உடற்கல்வி ஆசிரியர்கள் மதன்குமார், இயேசு ராஜ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று போட்டிகளை நடத்தி விளையாட்டை கண்காணித்தனர்.