×

தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி; எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ.பாலுவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எத்தனையோ மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளுக்கு சென்றிருந்தாலும் திருவாரூர் வந்திருப்பது தனி உணர்வு. தமிழ்மொழியில் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியை தருகிறது. சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது அண்ணா தலைமையிலான திமுக அரசு. தாய்மொழியான அழகுத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர் என கூறினார்.

எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்:

தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்.

அனைத்து தரப்பு மக்களின் கருத்துகள் கேட்பு

அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே திமுக அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. பட்ஜெட் தயாரிக்க கலைஞர் பின்பற்றிய கருத்துக் கேட்பு முறையையே நாங்கள் பின்பற்றி வருகிறோம். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்ற வாக்குறுதி ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது என்று முதலமைச்சர் கூறினார்.

திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடுவதில்லை:

திட்டங்களை அறிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிக் கொள்வது இல்லை. ஒவ்வொரு திட்டமும் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்று மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வருகிறேன். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்பு மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருவாரத்தில் நிவாரணம்:

2 ஆண்டு ஆட்சியில் பல திட்டங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்தில் நிவாரண தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Government, election promises, Chief Minister M.K.Stalin
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...