டெல்லி : கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை, சுவாதி எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சுவாதி ஆஜரான போது, அவர் பிறழ் சாட்சியாக தெரிவதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தடைக் கோரி சுவாதியின் கணவர் ரஞ்சித் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரருக்கு குறைகள் இருந்தால் முறையிடலாம் என்றும் ஆனால் ரிட் மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை சுவாதி எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.