திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் 2022 - 23ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சு. அசோகன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் எம்.ராஜேந்திரன், உதவி இயக்குனர்கள் பாஸ்கரன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெரு நாய்கள் இனவிருத்தி கட்டுப்படுத்துதல் மற்றும் வெறி நோய் தடுப்பூசி அளிப்பது குறித்தும்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்து மற்றும் பயிர் சேதம் குறித்தும் விவாதித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்குவது இதில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கை கட்டணம் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து சங்கத்திற்கு புதிய வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எம்.மாஹின் அபூபக்கர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரூபேஷ் குமார், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீனாட்சி, துணை கலெக்டர் (பயிற்சி), நகராட்சி ஆணையர்கள், வனத்துறை அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி ஆணையரக அலுவலர், தீயணைப்புத்துறை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.