வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (18), சக்திவேல் (20). இவர்கள், உறவினர் மகள் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பேக்கரி கடைக்கு சென்று கேக்கை வாங்கிக்கொண்டு, உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு, பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், பிறந்தநாள் கேக்கை டேபிள் மேல் வைத்து வெட்ட முயன்றபோது, கேக் மிகவும் கடினமாக இருந்ததால், அதனை வெட்ட முடியாமல் போனது. இதனால் ராஜேஷ், சக்திவேல் ஆகிய 2 பேரும் கேக்கை எடுத்துக்கொண்டு மீண்டும் பேக்கரிக்கு சென்று, ஊழியரிடம் கேக் மிகவும் கடினமாக உள்ளது என முறையிட்டனர்.
அப்போது, ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளது. நீங்கள் வேண்டுமானால் சாப்பிட்டு பாருங்கள் என கூறியுள்ளனர். இதனால், அவர்கள் கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். இதனை பார்த்து, அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சில் ராஜேஷ், சக்திவேல் ஆகியோரை மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.