ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஓபிஎஸ் விரைவில் மாநில ஆளுநராகிவிடுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் பாஜக தலைவராகி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு ஈரோட்டில் பேசி வருகிறார். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமிக்கு மீசையை பற்றி பேச அருகதை இல்லை.
எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்திருக்கிறாரா? சசிகலா, ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லை. டெல்லியில் உள்ள எஜமானார்கள் மோடி, அமித்ஷாவுக்கு தான் உண்மையாக இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தபோதும், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றபோதும் கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தபோது இந்த மீசை என்ன செய்தது? பாஜக ஆடியோ, வீடியோ வெளியிட்டு கட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. கட்சி பிரச்சனைக்காக மட்டும்தான் பிரதமரையும், ஆளுநரையும் எடப்பாடி பழனிசாமி போய் சந்திப்பார்.
19 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் முடங்கிக் கிடக்கின்றன. என்றைக்காவது போய் ஆளுநரை சந்தித்திருக்கிறாரா பழனிசாமி? பாஜக ஆளுநர் பயிற்சி மையம் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும். சென்னை கிண்டியில் மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூலகமும் 18 மாத கால திமுக ஆட்சியில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. மதுரை எய்ம்ஸில் இருந்து செங்கல் திருடி வந்ததாக ஒருவர் சொல்கிறார், அவருக்கு வெட்கமாக இல்லை? அதிமுக வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.