சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் விதித்துள்ள தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகவே இந்த அறிவிப்பை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தற்போது ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் இவர்கள் தான், பிரபாகரனின் வீரமரணம் குறித்த அறிவிப்பை தடுத்தார்கள் என்று தயா கூறியுள்ளார்.
இப்போது அவ்வாறு சொல்வதற்கான தேவை என்ன என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார். 2009ல் பிரபாகரன் மரணித்தபோது நெடுமாறன் யாருடன் தொடர்ப்பில் இருந்தாரோ அவர்களோடு தான் தற்போது தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட தயா, புலம்பெயர் தேசங்களில் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக சில பிம்பங்களை உருவாக்கி நிதி வசூலில் சிலர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள் தான், நிதி வசூலில் ஈடுபட்டதாக தயா மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்தது என்ன என்பதை பழ.நெடுமாறன் பகுத்தறிந்து இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பழ.நெடுமாறனின் அறிவிப்பு எதிரொலியாக இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் இதனை காரணம் காட்டி விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இலங்கை அரசு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தயா மோகன் கூறியுள்ளார். இலங்கை அரசு - சிங்களர்கள் இடையே கொதிநிலையை உருவாக்கி குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வு திட்டத்தை கூட தமிழ் மக்களுக்கு தராது என்பதால் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற அறிவிப்பு இலங்கை தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தயா மோகன் தெரிவித்துள்ளார்.