ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே பாக்கு வெட்டி அய்யனார் கோயில் உள்ளது. மகா சிவராத்திரியையொட்டி மதுரை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 38 பேர் இக்கோயிலுக்கு கடந்த 18ம் தேதி வந்தனர். அங்கு சுவாமி கும்பிட்டு விட்டு, ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் உலகம்மாள் கோயிலுக்கு 2 வேன்களில் நேற்று முன்தினம் இரவு வந்து தங்கினர்.
நேற்று காலை சுவாமி தரிசனம் முடித்து விட்டு மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டனர். பின்னர் கடல் அழகை ரசிக்க விரும்பிய அவர்கள், 3 நாட்டுப்படகுகளை வாடகைக்கு அமர்த்திச் சென்றனர். பிற்பகல் 3 மணியளவில், முதலில் சவாரி சென்ற 2 படகுகள் பத்திரமாக கரை திரும்பின. மற்றொரு படகில் 4 சிறுவர்கள் உள்பட 16 பேர் சவாரி சென்றனர். படகு சென்ற சிறிது நேரத்தில் கடல் அலையில் மேலே எழுந்த படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த இருளாண்டி மனைவி மணிமேகலை (53), இவரது உறவினரான சோலையழகுபுரத்தைச் சேர்ந்த இருளாயி (55) ஆகியோர் தவறி விழுந்து கடலில் மூழ்கி இறந்தனர். இவர்களை மீட்க கடலில் குதித்த 3 பேரில் முத்துமணி (35) மாயமானார்.
இவரை தேவிபட்டினம் மரைன் போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட 2 பேரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆட்களை சவாரி ஏற்றிச் சென்ற நாட்டுப்படகு உரிமையாளர் சுந்தரை போலீசார் கைது செய்தனர்.