×

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவு: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

கோயம்புத்தூர்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான சிவன், கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ககன்யான் என்பது மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அனுப்பி 7 நாட்கள் தங்கி சோதனைகள் செய்த பிறகு மீண்டும் பூமிக்கு திருப்பி வரும் திட்டமாகும். அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை விண்ணுக்கு ராக்கெட்கள் மூலம் செயற்கைகோள்களை மட்டுமே அனுப்பிவந்தோம். மனிதர்களை அனுப்பும் போது பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் தேவை. மனிதர்களை அனுப்பக் கூடிய வகையில் ராக்கெட்டை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியவுடன் பூமியில் இருப்பது போன்ற சீதோஷண நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சுற்றுசூழலுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மனிதர்கள் திரும்பி வரும் போது அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

முக்கியமாக பூமியில் இறங்கும் போது இறங்கும் இடத்தை தேர்வு செய்வது உள்ளிட்ட பலதரப்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றது. இவை அனைத்தும் முடிந்த பிறகு இரண்டு விண்கலங்களை மனிதர்கள் இல்லாமல் முதலில் ரோபோகளை அனுப்பிய பின்னர் அதனுடைய செயல் திறன்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சந்திராயன், ஹார்பிடர் விண்கலம் நிலவை சுற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. நிலவுக்குள் இறங்கி ஆராயும் வேண்டர் விண்கலம் செயல்திறன் இழந்தது. அதிலிருந்து நிறைய தகவல்கள் வந்துள்ளது. அதை பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

Tags : ISRO ,Shivan , The work of making a rocket to send humans to space is complete: Ex-ISRO chief Shivan
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...