×

வரதராஜபுரம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் வரதராஜபுரம் ஊராட்சி. பூந்தமல்லியை ஒட்டி உள்ள இந்த ஊராட்சியில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில் 800 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள்.

இவர்கள் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்களை குறைந்த செலவில் செய்வதற்கு இந்த ஊராட்சியில் அரசின் சமுதாய நலக்கூடம் இல்ல்லை. எனவே, இவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அருகில் உள்ள பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களையே நாட வேண்டியுள்ளது.

தனியார் மண்டபங்களில் பல ஆயிரங்கள், மற்றும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். வரதராஜபுரம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தந்தால் இந்தப் பகுதி ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். எனவே சமுதாய கூடம் கட்டித்தரவேண்டுமென அந்தப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Varadarajapuram , Request to build community welfare center in Varadarajapuram panchayat
× RELATED வண்டலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி