புதுடெல்லி: ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுப்பதற்கு கவுன்சலிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மும்பை, ஐஐடி இயக்குனர் தெரிவித்தார். குஜராத்தை சேர்ந்த மாணவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர்,மும்பை ஐஐடியில் படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த தர்ஷன் சோலங்கி கடந்த கடந்த 12 ம் தேதி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க ஐஐடி கல்வி நிறுவனங்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இது குறித்து மும்பை ஐஐடி இயக்குனர் சுபாஷிஷ் சவுத்ரி கூறுகையில்,‘‘ படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். அதே போல்,தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மனநல மையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.