×

மாரடைப்பால் காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம்!

சென்னை: நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் சென்னையில் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயில்சாமி (57) காலமானார். சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திரையுலகினர், அரசியல் கட்சியினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலையில் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் ரஜினிகாந்த் கூறும்போது, ‘மயில்சாமி எனக்கு நீண்டகால நண்பர். அவருக்கு எம்ஜிஆர் பிடிக்கும். தீவிர சிவ பக்தர். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு போகும்போதெல்லாம் எனக்கு போன் செய்வார்.

கடந்த ஆண்டும் எனக்கு போன் செய்திருக்கிறார். படப்பிடிப்பில் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. தனது தீவிர பக்தனை தனக்குரிய நாளில் சிவன் அழைத்துக்கொண்டான். விவேக், மயில்சாமியின் இழப்பு, திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்த சமூகத்துக்கும் பேரிழப்புதான். இருவரும் நல்ல சிந்தனைவாதிகள், சமூக அக்கறை கொண்டவர்கள்.

மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு என்னை அழைத்து வந்து லிங்கத்திற்கு என் கையால் பாலாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசையாக இருந்தது. கண்டிப்பாக, அந்த ஆசையை நிறைவேற்றுவேன்’ என்றார். கைலாய வாத்தியம் இசைத்து மயில்சாமி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் மயில்சாமியின் உடல் நேற்று பகல் தகனம் செய்யப்பட்டது.

Tags : Comedian Mailsamy ,Vadapalani crematorium , Cremation of actor Mylaswamy
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...