திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றும் வழக்கம்போல் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கோயில் அருகே உள்ள வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை எதிரே உள்ள பொதுக்கழிவறையில் இருந்து திடீரென தீப்பற்றிய நிலையில் நேற்றிரவு பெண் ஒருவர் அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து பெண்ணை மீட்டனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.
இறந்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த சுமதி(48) என தெரியவந்தது. அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுமதி திருமலைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? திருமலைக்கு அவருடன் வேறு யாராவது வந்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.