×

நரிக்குடியை கலக்கிய கிடாய் முட்டு போட்டி

விருதுநகர்: விருதுநகர் அருகே நடந்த கிடாய்முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாய்கள் பங்கேற்று, ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. 30 முட்டுகளுக்கு தாக்குப் பிடித்த கிடாய்கள், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் மதுரை தெற்குவாசல் கிடாய்முட்டு நண்பர்கள் குழுவினர் சார்பில் நேற்று கிடாய்முட்டு போட்டி நடந்தது. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பசீர் அகமது போட்டியை தொடங்கி வைத்தார்.

மதுரை, சிவகாசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட கிடாய் ஜோடிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க வந்த கிடாய்களை, அரசு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, சான்றளித்தனர். போட்டி துவங்கியதும் ஒவ்வொரு ஜோடியாக கிடாய்கள் களத்தில் இறங்கின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உற்சாகமூட்டி கோஷங்களை எழுப்ப, சீற்றத்துடன் கிடாய்கள் ஆக்ரோஷமாக முட்டிக் கொண்டன. 30 முறை முட்டி, அசராமல் நின்று தாக்குப்பிடித்த கிடாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags : Kitai Muttu , Kitai Muttu competition with mixed fox
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது