×

அஸ்வின், ஜடேஜா மாஸ்டர்கள்: கேப்டன் ரோஹித் பாராட்டு

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியா கைப்பற்றி இருக்கிறது. தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இனி அடுத்த இரண்டு போட்டிகளில் இழந்தாலும் தொடர் சமனில் தான் முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில் யார் நடப்பு சாம்பியனோ அவர்கள் கோப்பையை கைப்பற்றியதாக அறிவிக்கப்படுவார்கள். அதன்படி இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை 4வது முறையாக தொடர்ந்து கைப்பற்றி இருக்கிறது. இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இந்த முடிவு நிச்சயம் சிறப்பானது. நேற்று போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் ஆட்டத்தில் பின்னோக்கி இருந்தோம். ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் எங்கள் வீரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து போட்டியின் முடிவையே மாற்றிவிட்டனர். நாங்கள் வெறும் ஒரு ரன் தான் பின் தங்கியிருந்தோம். இதுவே அதிக ரன்கள் பின்தங்கி இருந்தால் கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது மிக கடினமாக இருந்திருக்கும். ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்னர்.  ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகளை அவர்கள் வீழ்த்தியது பாராட்டக் கூடியது. இதேபோன்று கடைசி இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் தங்கள் பணியை சரியாக செய்தார்கள்.

இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று (நேற்று) அதிரடியாக விளையாடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொண்டோம். ஆஸ்திரேலியா எவ்வளவு ரன்கள் அடித்தாலும் நாம் பதற்றப்படக்கூடாது என்ற முடிவில் இருந்தோம். அவர்கள் ஏதேனும் தவறு செய்வார்கள் என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். அதேபோல் அவர்கள் தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்தனர். இந்த ஆடுகளத்தில் தற்போது உள்ள கால சூழ்நிலையில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கிறது. அது முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் என்று எனக்கு தெரியும். நேரம் போக போக பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறுகிறது.

அதனால் காலை நேரத்தில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என நினைத்தோம். அஸ்வின் ஜடேஜா போன்றோர் போட்டியை தலைகீழாக மாற்றி விட்டானர். அவர்களெல்லாம் மாஸ்டர்களாக இருக்கிறார்கள். இந்த நான்கு இன்னிங்ஸில் பல விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக ஜடேஜாவும் விராட் கோஹ்லியும் பேட்டிங் செய்ததும், அக்சர் பட்டேல் அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப் தான் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பாக கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.

Tags : Ashwin ,Jadeja Masters ,Rohit , Ashwin, Jadeja Masters: Praise for Captain Rohit
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...