*திரளான பக்தர்கள் புனிதநீராடினர்
திருமலை : சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று பிரமோற்சவம் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீராடினர்.திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவம் கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பெரிய சேஷம், சின்னசேஷம், அன்னம், சிங்கம், சர்வபூபாலம், கற்பக விருட்சம், முத்துபந்தல், கருடன், அனுமந்த, யானை, சூரியன், சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினந்தோறும் காலை மற்றும் இரவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
8ம் நாளான நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
அதன்பின் மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.இந்நிலையில், பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பல்லக்கு உற்சவம் நடந்தது. பின்னர் தெப்பகுளத்தின் முன் உற்சவ மூர்த்திகளுக்கும், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர். பின்னர், இரவு 7 முதல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது.இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ குருமூர்த்தி, கண்காணிப்பாளர்கள் செங்கல்ராயுலு, வெங்கடசுவாமி, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தோட்டக்கலை துறை இணை இயக்குநர் ஸ்ரீனிவாசலு தலைமையில் 9நாட்களுக்கு 10 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டு 50 பணியாளர்கள் தொடர்ந்து அலங்கரிக்கப்
பட்டது. இதற்காக பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து விதவிதமான மலர்களால் செய்யப்பட்ட மாலைகள் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.