ஊட்டி : ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்தில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நீலகிாி மாவட்டத்தில் உறைபனி பொழிவு காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், குளிர் காணப்படுகிறது.
இந்த சூழலில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நெருங்கிய நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகளை மட்டுமே காண முடிகிறது. அதே நேரம் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிதது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்தில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் காட்சி கோபுரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். அதிகளவிலான வாகனங்கள் சென்று வந்ததில் சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டது.