பிரேசில்: பிரேசில் நாட்டில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் தென்கிழக்கு கடற்கரை நகரமான ஹிலபெலாவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், கடற்கரை பகுதியில் உள்ள சாலைகள் இடிந்து விழுந்தும், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. வெள்ளம் காரணமாக நகரின் பல இடங்களில் குடிநீர் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாஃபாலோ நகரில் பெய்த மழைக்கு 7 வயது குழந்தை மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். நிலச்சரிவுகளால் 50 வீடுகள் இடிந்துள்ளதாகவும், இதில் காணாமல் போன மக்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சாவோ செபஸ்டியாவோ நகர மேயர் ஃபெலிப் அகஸ்டோ தெரிவித்தார். மேலும் இந்த வெள்ளத்தில் நிறைய வீடுகளின் மேற்கூரை மட்டும் தெரியும்படி நீரில் மூழ்கியுள்ளன. பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.