×

சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவரும் 10 மாடுகளை பிடிக்க உத்தரவு: உபி.யில் நூதன திட்டம்

ஷாஜஹான்பூர்: சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க உபி.யின் ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகம் நுாதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் விவசாயிகளால் தெருக்களில் கைவிடப்படும் மாடுகள் பெரும்  பிரச்னையாக உள்ளது. பல்லாயிரம் மாடுகள் மாநிலத்தின் சாலைகள், வீதிகள் என அனைத்துப் பகுதிகளும் அலைந்து திரிகின்றன. இந்த மாடுகள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றன.கூட்டம், கூட்டமாக சென்று பயிர்களை தின்று, துவைத்து, நாசம் செய்துவிடுகின்றன மாடுகள். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட மாடுகள் பிரச்னை எதிரொலித்தது. இந்நிலையில், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு,ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவர்களும் சாலையில் திரியும் 10 மாடுகளை பாதுகாப்பாக தொழுவத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் சாலைகளில் மாடுகளின் தொல்லை குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட  தலைமை வளர்ச்சி அதிகாரி ஷியாம் பகதூர் சிங் கூறுகையில்,‘‘ சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் தொல்லை குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கிராம பஞ்சாயத்து தலைவர்களை இதில் ஈடுபடுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது. மாவட்டத்தில் 1,069 கிராம பஞ்சாயத்துக்களில் மொத்தம்  6 ஆயிரம் மாடுகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ளன’’ என்றார். இதுகுறித்து ராம்பூர் பர்கத் பஞ்சாயத்து தலைவர் கூறுகையில்,‘‘ மாவட்ட நிர்வாகத்தின்  திட்டத்தால் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவது தற்போது குறைந்துள்ளது’’ என்றார்.

Tags : UP , Every panchayat head ordered to catch 10 cows to stop cows from roaming on roads: Nuthana scheme in UP
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...