வேலூர்: தமிழ்நாட்டில் வேலூர், சென்னை புழல், கோவை, சேலம், மதுரை, கடலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் துணியை தாங்களே துவைத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், மத்திய மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் உள்ள கைதிகள் துணி துவைக்க பெரிய அளவிலான வாஷிங்மெஷின்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைக்கும் தலா 1 வாஷிங்மெஷின் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம். இவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது. தற்போது 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறைகளில் கைதிகளின் நலன் கருதி ரூ.60 லட்சம் மதிப்பில் 12 வாஷிங்மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் மத்திய சிறையில் உள்ள வாஷிங்மெஷின் ஓரிரு நாளில் பயன்பாட்டிற்கு வரும்’ என்றனர்.