சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் குரும்பகவுண்டர் இனத்தின் குலதெய்வமான தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம்.
கோவிந்தநாயக்கன்பாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்டோர் அய்யம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டனர். மாலை 5 மணிக்கு மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோயிலின் வெளியே வந்து தனக்குத்தானே தலையில் உடைத்து வழிபாடு நடத்தினர். காலை வரை அனைவரும் கண்விழித்து மகாசிவராத்திரி விழாவை கொண்டாடினர்.
