×

வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கரில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் ஓலா நிறுவனம் ரூ.7,874 கோடி முதலீட்டில் 4 சக்கர மின்சார வாகனம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம்: 3,316 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொழிற்  பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ரூ.7,874 கோடி முதலீட்டில் 4 சக்கர மின்சார வாகனம் உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.  இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.150 கோடியில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை, ரூ.110 கோடியில் ஜிஎக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்மூலம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது.

இந்த திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும். இதில்  ஓலா செல் டெக்னாலஜீஸ் நிறுவனம் 5,114 கோடி ரூபாயும்,  ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம்    நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 43 இடங்களில் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு  தேவைப்படும் வாயு உற்பத்தி மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம்  முதன்முதலாக, 1986ம் ஆண்டு சென்னையில் உள்ள மணலியில் வாயுக்கள் பிரிப்பு ஆலை ஒன்றை தொடங்கியது.  அதற்கு பிறகு, சேலம், திருநெல்வேலி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் விரிவாக்க திட்டங்களை மேற்கொண்டது.  

இந்நிறுவனம், 4.5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட  நூற்றுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தொட்டிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் திரவ ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தது. தற்போது, ரூ.150 கோடி முதலீடு மற்றும் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம்,  சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில், இந்நிறுவனம் நிறுவியுள்ள புதிய 200 டிபிடி திறன்கொண்ட  அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிறுவனம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உட்பட அனைத்து அனுமதிகளும் பெற்றிட தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒற்றைச்சாளர இணையம்  மூலம் ஆதரவு சேவைகள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிஎக்ஸ் குழுமம், ஃபைபர் - டு - தி - ஹோம் துறையில் ஐரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும்.  சுமார் 20 ஆண்டுகளாக எப்டிடிஎச் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.110 கோடி முதலீடு மற்றும் 100 உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, குறுகிய காலத்திலேயே சென்னை, துரைப்பாக்கத்தில் ரூ.110 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள ஜிஎக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு,

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால், குழும தலைவர் அருண் குமார், துணைத்தலைவர் பி.சி.தத்தா, முதுநிலை இயக்குநர் சௌரப் ஷர்தா, ஐநாக்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல வணிக தலைவர் டிகந்த சர்மா, துணை பொது மேலாளர் (விற்பனை) ரங்கராஜன், விற்பனை மேலாளர் ரமேஷ் ராவ், ஜிஎக்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் பரிதோஷ் பிரஜாபதி, வர்த்தக தலைவர் சம்பித் ஸ்வைன்,  தொழில்நுட்ப தலைவர் வினய் சர்மா, நெதர்லாந்து நாட்டிற்கான கௌரவ துணை தூதர் கோபால் சீனிவாசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : groundstone ,Ola ,Vellore , Adikkal Ola to set up mini tidal park on 4.98 acres in Vellore district with an investment of Rs 7,874 crore contract to manufacture 4-wheeler electric vehicle: employment for 3,316 people
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...