ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்பி.யுமான திருநாவுக்கரசர் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: திமுக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை, மத்தியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இங்கு 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவனை வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள்.
இந்தியாவில் பாஜவுக்கு மாற்று சக்தியாக காங்கிரஸ் கட்சியையும், மோடிக்கு மாற்றாக ராகுல் தலைமையையும் எண்ணுகின்றனர். இதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி, மக்களை சந்திக்கும் நிலையில், அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை மக்கள் ஏற்றுள்ளதால், எதிரணியினரால் குறை கூற முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பதில் கூறாத பிரதமர் மோடியை மக்கள் கேலி, கிண்டல் பேசி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலை வழங்குவார்கள். அதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னுதாரணமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.