சென்னை: சென்னையில் ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆப் இந்தியா சார்பில் நேற்று நடைபெற்ற கார்டியோபேஸ் 2023 நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ெகாண்டார். சென்னையில் ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆப் இந்தியா சார்பில் நேற்று கார்டியோபேஸ் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர் செங்கோட்டுவேலு, டாக்டர் முருகானந்தன், டாக்டர் சென்னியப்பன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள பேராசிரியர் டாக்டர் தணிகாசலம் மற்றும் ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆப் நிர்வாகிகள், மருத்துவத்துறை வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வாழ்நாள் சாதனையாளர் விருது, பேராசிரியர் டாக்டர் தணிகாசலத்துக்கு கிடைக்கிறது. அவரிடத்திலே சொன்னேன், இந்த விருதை உங்களுக்கு கொடுப்பதன் மூலமாக வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு நினைவலைகளாக என்னுடைய உள்ளத்தில் இது பதிந்திருக்கிறது என்று.
மருத்துவ ரீதியாகவும், பல்வேறு நாட்டு நடப்புகளை பற்றியும் அவரிடத்திலே விவாதிக்கிற போது, எதையும் நிதானமாக, யோசித்து, சிந்தித்து, அழுத்தமாக, ஆணித்தரமாக எடுத்துச் சொல்லக் கூடியவர். அவருடைய அனுபவம் அப்படி. பல நேரங்களில் அவரே குறிப்பிட்டு சொன்னார், கலைஞருக்கும், அவருக்கும் இருந்த நட்பு என்பது சாதாரண நட்பல்ல, மருத்துவ ரீதியாக ஏதாவது விவாதிக்க வேண்டும் என்று சொன்னால், உடனே எஸ்.டியை கூப்பிடு என்றுதான் சொல்லுவார். எஸ்.டியிடத்தில் கேட்டீர்களா என்று தான் கேட்பார். அந்த அளவிற்கு ஒரு நம்பிக்கைகுரியவராக இருந்தவர் நம்முடைய பேராசிரியர் தணிகாசலம். இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதையே வரவேற்புரை ஆற்றுகிற போது செங்கோட்டுவேல் குறிப்பிட்டுச் சொன்னார். நாங்கள் பெரிய பாக்கியமாக கருதுகிறோம்.
பல்வேறு சிரமங்களுக்கிடையில் வந்திருக்கிறீர்கள், என்றெல்லாம் குறிப்பிட்டு சொன்னார். எந்த சிரமமும் கிடையாது. இதுதான் எனக்கு சந்தோஷம், இதுதான் எனக்கு மகிழ்ச்சி, இதுதான் எனக்கு பூரிப்பு. இன்றைக்கு சுற்றி சுழன்று, சுறுசுறுப்பாக பணியாற்றுகிறேன் என்று சொன்னால், அது உங்களுடைய அறிவுரை தான், உங்களுடைய மருத்துவத் துறை தான், என்னை இந்த அளவுக்கு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, வாழ்நாள் சாதனையாளர் என்கிற அந்த விருதினை பெற்றிருக்கக்கூடிய டாக்டர் தணிகாசலத்தை தலைவர் கலைஞர் இருந்திருந்தால் எப்படி மகிழ்ச்சியோடு வாழ்த்தியிருப்பாரோ, அதேபோல், அவர் வழி நின்று நானும் அவரை வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.