பொன்னேரி: கொதிகலன் பழுதால் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 2வது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது காரணமாக கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் கொதிகலன் குழாய் சீரமைக்கப்படும் என அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
